தமிழ்க் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
குறித்த கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தின் முடிவில் யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த விஜயகாந்த்,
இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கை விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
இது தொடர்பில் அவர் அங்கு தொடர்ந்தும் கூறியதாவது,
கருணா உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அரசாங்கத்தின் சுகபோக வாழ்க்கையையும் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்க்கை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது.
ஆகவே தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.