Ad Widget

த.தே.கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளர் ஈ.பி.டி.பியுடன் இணைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளருமான K.S. பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

Kamal-panald-master

கூட்டமைப்பின் தீவகத்திற்கான இணைப்பாளராக கடந்த காலங்களில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவும் பிரசாரங்களில் முனைப்பாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகளிலும், கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனது தெரிவு மற்றும் தீவகப் பகுதியில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளை இதுவரையில் மேற்கொள்ளாத கூட்டமைப்பின் மற்றுமொரு வேட்பாளருமான கனகரத்தினம் விந்தன் தொடர்பிலும் இவர் அதிருப்தி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் (கமல்) முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து கொண்ட பேணாட் மாஸ்ரர் கருத்துத் தெரிவிக்கும்போது, எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி தொடர்ந்தும் ஏமாறக்கூடாது. தீவகத்தை மட்டுமல்ல வடபகுதியை எவ்விதத்திலும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கான திட்டங்களோ, கொள்கைகளோ அவர்களிடம் இல்லை.

இந்நிலையில், வடபகுதியைப்பற்றியோ, மக்களது வாழ்நிலைபற்றியோ ஒன்றுமேதெரியாமலும், வடபகுதியில் வாக்குரிமை இல்லாது கொழும்பில் வாழ்ந்து வந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதில் என்ன நியாயம் இருக்கின்றது என விசனம் தெரிவித்ததுடன், இன்றைய அமைதிச் சூழலிற்கு வித்திட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும்; அமைச்சர் அவர்களினால் மட்டுமே பெற்றெடுக்கமுடியும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வாய் கிழியப் பேசமுடியுமே தவிர வேறெதையும் செய்யமுடியாது என்றும் உறுதிபடத்தெரிவித்தார்.

Related Posts