Ad Widget

தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை

கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தென் இலங்கை ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவுடன் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

‘கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சுமார் 40 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். இவர்களில் நால்வர் சிங்களவர்கள் என்றும் ஏனையவர்கள் தமிழர்கள் என்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிய செயலாளர் பாரதி இராசநாயகம் தனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில், லசந்த விக்கிரமதுங்க மற்றும் எக்னலிகொட ஆகிய சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலை குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.

ஆனால், நிமலராஜன், சுகிர்தராஜன், நடேசன் மற்றும் சிவராம் போன்ற தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இவ்வாறு 35 சம்பவங்கள், விசாரணைகள் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

Related Posts