Ad Widget

தமிழ்நாட்டில் பெப்ஸி, கோக் விற்பனை நிறுத்தம்

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, பல வாரங்களுக்கு முன்பிருந்தே, இந்த விற்பனை நிறுத்தம் தொடர்பாக, தனது சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் அச்சங்கங்கள் ஈடுபட்டு வந்தன.

இதையடுத்து, அந்த உறுப்பினர்களின் கடைகளில் இந்த பானங்கள் விற்பனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா. வெள்ளையன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாரம் செய்து வருவதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின்போது, மாணவர்கள் மத்தியில் பேசும் போது, அதனால் உந்தப்பட்டு, ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் கடைகளில் அந்த பானங்கள் விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்த நிலையில், ஏற்கெனவே 75 சதம் அளவுக்கு விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

தங்கள் அமைப்பில் 50 லட்சம் வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அதில் 2 சதம் பேர்தான் இந்த பானங்களை விற்பனை செய்வதாகவும் அவர்களும் அதை இன்றுடன் நிறுத்திவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுவிளைவிப்பதாகவும், அவை பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகவும் வெள்ளையன் குற்றம் சாட்டினார்.

பெப்ஸி, கோகோ கோலா பானங்கள் தற்போது சுமார் 90 சதம் அளவுக்கு சந்தையைப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், உள்ளூர் பானங்களை பிரபலப்படுத்த வேண்டும் என்று வர்த்தக சங்கங்கள் கூறுகின்றன. மேலும், பழச்சாறு விற்பனையை ஊக்குவிக்கப் போவதாகவும் அவை கூறுகின்றன.

ஆனால், உள்நாட்டு பானங்களால் அந்த அளவுக்கு சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று வெள்ளையனிடம் கேட்டபோது, ஒரு சில மாதங்களில் பெருமளவு தேவையைப் பூர்த்தி செய்ய முடியம் என்று தெரிவித்தார்.

சூப்பர் மார்க்கெட், பல்லங்காடிகளில் இந்த பானங்கள் விற்பனை செய்யப்படுவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும்,

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிரான அமைப்பான பீடாவுக்கு எதிராக இளைஞர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அந்த நேரத்தில், வெளிநாட்டு பானங்களுக்கு எதிரான பிரசாரமும் சூடுபிடித்தது.

அதுவே, வர்த்தக அமைப்புக்கள் முறைப்படி அந்த பானங்களின் விற்பனையைத் தடை செய்ய வழிவகுத்தது.

ஆனால், இந்த தடையை முழுமையாக அமல்படுத்த முடியுமா என்பது குறித்து தெளிவான இலக்கு இல்லை. தொடர்ந்து, வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக வர்த்தக அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கோகோ கோலா மற்றும் பெப்ஸி பானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விற்பனைத் தடை, நுகர்வோருக்கு எதிரான, போட்டிச் சந்தைக்கு எதிரான நடவடிக்கை என்றும், மேக் இன் இந்தியா கோஷத்துக்கு எதிரானது என்றும் இந்திய குளிர்பான நிறுவனங்களுக்கான சங்கம் (ஐபிஏ) கருத்துத் தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் கோகோ கோலா மற்றும் பெப்ஸிகோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன மேலும் தமிழ்நாட்டில் 2000 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன எனவே இந்த புறக்கனிப்பு “இந்தியாவில் தயாரிப்பதற்கு” எதிரானதாக உள்ளது என இந்திய குளிர்பான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலகத் தரத்தில் தயாரிக்கப்படும் இந்த பானங்கள், மிகவும் பாதுகாப்பானது என்றும், அதில் உள்ள உபபொருட்கள் உடலுக்கு எந்தக் கேடும் விளைவிப்பவை அல்ல என்றும் ஐபிஏ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எது தேவை என்பதைத் தேர்தெடுக்கும் உரிமயை தொடர்ந்து பெறுவார்கள் என்று நம்புவதாகவும்,

கருத்துவேறுபாடு கொண்டுள்ள எந்த ஒரு நிறுவனத்துடனும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் இந்திய குளிர்பான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts