Ad Widget

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும்: வடக்கு முதல்வர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”சுயநலம் மேலோங்கும்போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரிசெய்யவும் உதவும்.

1949 ஆம் ஆண்டு கொள்கை நிமித்தம் தந்தை செல்வா தமிழ்க் கொங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் தறுவாயில் சுயநலம் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர்.

ஆகவே பிளவுகள் கொள்கை நிமித்தமும் ஏற்படக்கூடும் சுயநலம் காரணங்களுக்காகவும் ஏற்படலாம். இன்றைய பிளவுநிலை எவ்வாறு ஏற்பட்டதென்பதை நீங்களே ஆய்தறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானியரின் வேலை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Posts