தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியிலிருக்கக் கூடிய மேல்மட்ட உறுப்பினர்கள் சி.வி.கே. சிவஞானத்தைப்போல் பணம் படைத்தவர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எங்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தின் முதலமைச்சர் பதவியோ, அமைச்சர் பதவியோ, அவைத்தலைவர் பதவியோ தமிழ் மக்களுக்கு அடிப்படையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டமைப்புக்கள் இல்லை.
இதன் காரணமாக வடமாகாண சபை தொடர்பில் நாங்கள் பெரிதளவில் அக்கறை செலுத்துவதில்லை. விக்கினேஸ்வரன் ஐயாவை நாங்கள் ஆதரிப்பது வடமாகாண முதலமைச்சர் என்ற காரணத்துக்காக மட்டுமல்ல. அவர் நேர்மையானதொரு அரசியல்வாதி.
ஆகவே, அவரது கொள்கைகளுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு எதிராக நாமனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
வடமாகாண அவைத்தலைவர் சிவஞானம் கடந்த வாரம் நடந்து கொண்ட விதம் தொடர்பாகத் தற்போது சர்ச்சைகள் உருவாகியிருக்கிறது. முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தன்னுடைய தலைமையில் மேற்கொள்வதற்கு எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் தற்போது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.
அவைத்தலைவர் பதவி என்பது கட்சிப் பதவிகளுக்கு அப்பால் நடுநிலைமை வகிக்க வேண்டியதொரு பதவியாகும். ஒரு விவாதத்தின் போது அவர் சார்ந்த கட்சி தவறு செய்திருந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அவைத்தலைவருக்குண்டு.
நடுநிலைமை வகிக்க வேண்டிய பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினராகக் கருதப்பட மாட்டார். வாக்கெடுப்பு இடம்பெறும் போது வாக்குகள் இரு தரப்புக்களிடையே பிரிந்திருக்கும் போது மாத்திரம் தான் அவருக்கு வாக்குரிமையுள்ளது. இது தான் வழமையான நடைமுறை.
வடமாகாண சபை எங்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றுக் கோசமாகவிருந்தாலும் கூட அவ்வாறான சபையில் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அந்த வகையில் வடமாகாண அவைத்தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் கெளரவத்தைக் காப்பாற்றும் வகையில் செயற்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறான ஒருவரிடம் இருந்து நாங்கள் மேலதிகமாக எதனையும் எதிர்பார்க்க முடியாது. என்பது தான் யதார்த்தம்.
துரதிஷ்டவசமாகத் தந்தை செல்வநாயகம் ஐயா உருவாக்கிய தமிழரசுக் கட்சியிலிருக்கக் கூடிய மேல்மட்டம், சீ.வீ.கே. சிவஞானத்தை ஒத்த பணமுடையவர்களாகத் தான் காணப்படுகிறார்கள். ஆகவே, இது தொடர்பில் எமது மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.