தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது நடை பெறாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வியாழேந்திரன் கட்சி தாவியமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவரைப் பற்றி எமக்கு சந்தேகம் இருந்தது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கட்சியால் அவர் நியமிக்கப்பட்டவர். அந்தக் கட்சியின் தலைவருக்கு சில வாரங்களாக கூறிக்கொண்டு வருகின்றேன்.
வியாழேந்திரனின் பேச்சுகளும் நடத்தைகளும் எனக்குப் பிடிக்கவில்லை. இவரைப் பற்றி நான் சந்தேகப்படுகின்றேன். திருத்தவேண்டும் என்றேன். அவர் வெளிநாடு போயிருந்தார். அவர் நாடு திரும்பிய பின்னர் கட்சித் தலைவர் தொடர்புகொள்ள முயன்றபோதும் அலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. திடீரென மாறியிருக்கின்றார். அது எங்களுக்கு அதிர்ச்சியான விடயம் அல்ல. அந்த விடயம் தொடர்பாக நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் – என்றார்.
தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் ஒவ்வொரு கருமத்தையும் அரசியலுக்காகப் பயன்படுத்துபவர். மக்களுக்காகப் பயன்படுத்தவில்லை. தனது சொந்த அரசியல் முன்னேற்றத்துக்காக பயன்படுத்துகிறார். அவரது கருத்துக்களுக்கு பதில் சொல்வது முறையானது அல்ல – என்றார்.