Ad Widget

தமிழர்கள் அனைவரும் புலிகளே!

தமிழர்கள் அனைவரும் புலிகள் என திட்டிய மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழ் மக்கள் உட்பட கெகலியாமடு கிராமசேவகர் மற்றும் அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

pikku

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி சிங்கள மக்களை குடிமயர்த்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே, கிராமசேவகருக்கு மங்களாராம விகாரையின் தலைமை பௌத்த பிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

காவல்துறையினர் முன்னிலையிலேயே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களில் கால்நடை வளர்ப்போருக்காக சுமார் 2ஆயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக மேய்ச்சல் நிலமாக பயன்பட்டு வந்த குறித்த நிலப்பரப்புக்குள் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், குறித்த காணிகளை தமக்கு எழுதிக்கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு குறித்த காணிகளை பகிர்ந்தளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான 4 பிக்குகள் தலைமையிலான குழுவினரின் நடவடிக்கையை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவகர் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

Related Posts