Ad Widget

தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ப்பு

1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார்.

paneer-selvam

தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள பன்னீர் செல்வம் முன்பு வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிக்கியதால் முதல்வராக இருந்த ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு பதவி விலக நேரிட்டது. அப்போது அதாவது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியில் அமர்ந்தது அதுவே முதல் முறை என்பதால் முக்குலத்தோரின் அன்பையும், ஆதரவையும் பெற்றார் ஜெயலலிதா. அதன் பின்னர் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையானார். இதனால் 2002ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி அன்று அதாவது 7 மாதங்களுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதே போல கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் முதல்வர் பதவியை இழந்தார். செப்டம்பர் 29ஆம் திகதி, மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார் பன்னீர்செல்வம். அந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தார் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி. எனவே 2015 மே 22ம் திகதி அன்று அதாவது 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி இரண்டு முறை முதல்வர் பதவியை கட்சித் தலைமைக்காக ஏற்று பின் ராஜினாமா செய்த சரித்திரம் ஓ.பி.எஸ்.க்கே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 3வது முறையாக முதல்வராகியுள்ளார் பன்னீர்செல்வம். ஆளுநர் மாளிகையில் இன்று அதிகாலை 1 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

Related Posts