Ad Widget

தனிமையில் வசித்த வயோதிப பெண் அடித்துக் கொலை நகைகளும் கொள்ளை!-கோப்பாயில் சம்பவம்

யாழ். கோப்பாய் தெற்கில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் இனந்தெரியாதவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு அவரது நகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன.இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட குமராசாமி மங்கையற்கரசி (வயது 70) என்ற வயோதிபப் பெண்ணே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 04ம் திகதி கோப்பாயிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்கு வந்து தங்கியிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரது நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தனிமையிலேயே வசித்து வந்துள்ளார்.

இன்று காலை இவரது வீட்டிற்கு கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு சென்ற பெண்ணொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸார் இவரது சடலத்தை மீட்டுள்ளனர்.

இவரது சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து மிக அண்மையில் இவரது கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கும் மின்சார வயர் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர் அணிந்திருந்த காப்பு சங்கிலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களும் இதன்போது கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இவரது சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கோப்பாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts