தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராகச் செறய்பட்டு வருகின்ற அவர், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி வேறு ஒருவருக்கு வழிவிட்டுக் கொடுத்துவிட்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராக மட்டும் செயற்படப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது குறித்து கருத்து வெளியிட்டபோதே, கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது பற்றி சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து பதவி வகித்துவருகின்ற சம்பந்தன் அவர்கள், தமது வயது காரணமாக அந்தப் பொறுப்பில் இருந்து விலகியிருக்க விரும்பியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
தனது இந்த விருப்பமானது, கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்த வகையிலும் பாதிக்க மாட்டாது. பாதிக்கப் போவதில்லை என்று அவர் உறுதிபட கூறியிருக்கின்றார்.
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் பதவி மோகம் கொண்டவர்களல்ல. அவர்கள் தமிழ் மக்களின் ஈடேற்றத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பயனற்றதாகவே முடியும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியும், கூட்டமைப்பின் தலைமைப் பதவியும் ஜனநாயக முறைப்படியே முடிவு செய்யப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.