Ad Widget

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

fineபருத்தித்துறை பொலிஸ் பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் விதத்தில் வீடுகளிலும் சுற்றுச் சூழலிலும் குப்பை கூளங்கள், சிரட்டை, வெற்றுப் போத்தல்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தலா 4,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் பொலிஸாரும் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையின்போதே குப்பை கூளங்கள், சிரட்டை மற்றும் வெற்றுப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீடுகள், வளவுகளின் உரிமையாளர்களான மூவர் மீதும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி நந்தசேகரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மூவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இவர்களை கடுமையாக எச்சரித்த நீதிபதி தலா 4,000 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

Related Posts