டக்ளஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணையை சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த 5–ம் திகதி வீடியோ கான்பரன்சிங் மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி, வீடியோ கான்பரன் சிங் மூலம் விசாரணைக்கு ஒத்தழைப்பு வழங்கினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம். சாந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. அப்போது, டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.ராஜன், ‘வீடியோ கான்பரன்சிங் மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தவேண்டும் என்றால் சனிக்கிழமை தான் வசதியாக இருக்கும். எனவே, இந்த வழக்கு விசாரணையை சனிக்கிழமை நடத்தவேண்டும்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான எம்.பிரபாவதி, ‘இந்த வழக்கு 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தவேண்டும். அரசு தரப்பு சாட்சிகள் 40 பேரில் 2 பேர் இறந்து விட்டனர். 38 சாட்சிகளை தேடி பிடித்து ஆஜர்படுத்த தயாராக பொலிசார் உள்ளனர்’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி விசாரணையை வருகிற 24–ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வௌியிட்டுள்ளது.

Related Posts