Ad Widget

ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

apollo-hospital-jeya

பல்வேறு பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்களும் வந்து உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி அளித்தனர்.

இதன் காரணமாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் 90 சதவீதம் சுயமாக சுவாசிப்பதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த மாதம் 19-ந்தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வேறு ஒரு அறைக்கு மாற்றப்பட்டார்.

72 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, எப்போது விரும்புகிறாரோ, அப்போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறினார். இந்த நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று பிற்பகல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடல் நிலையில் பின்னடைவு காணப்பட்டது.

இதையடுத்து அவர் அவசரம், அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதய மருத்துவ நிபுணர்கள், நுரையீரல் மருத்துவ நிபுணர் கள், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் ஆகியோர் ஒருங் கிணைந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தினார்கள்.

இதற்கிடையே ஜெய லலிதாவுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த டாக்டர்களிடம் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் நலம் பின்னடைவு பற்றி விளக்கமாக கூறப்பட்டது.

லண்டன் டாக்டரும், எய்ம்ஸ் டாக்டர்களும் புதிய சிகிச்சை முறை ஒன்றை செய்யும்படி அறிவுறுத்தினார்கள். அதன்படி முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இதயம் தொடர்ந்து சீராக இயங்குவதற்காக செயற்கை இதய செயல்பாட்டு கருவியை (எக்ஸ்ட்ராகார்போரியல் மெம்பிரன் ஆக்சிஜெனசன் -ஈசிஎம்ஓ Extracorporeal Membrane Oxygenation ) பொருத்தினார்கள்.

இதன் பலனாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சுவாசம் சீரானது. அவர் உடல் நிலையில் இரவு 10 மணிக்குப் பிறகு லேசான முன்னேற்றம் காணப்பட்டது.

செயற்கை கருவியால் ஜெயலலிதாவின் சுவாசம் சீரானாலும் கூட அவர் உடல்நிலையில் திருப்தி கரமான முன்னேற்றம் கொண்டு வர டாக்டர்கள் அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பல்லோ மருத்துவமனையின் சிறப்பு டாக்டர்கள் குழு அவரை தீவிரமாக கண் காணித்தது. இதற்கிடையே நள்ளிரவில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் இதய நாளங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவரது இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்களில் ஒரு ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.

அந்த ரத்தக் குழாய் அடைப்பை எப்படி நீக்குவது என்று டாக்டர்கள் குழு தீவிர ஆலோசனை நடத்தியது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களுடன் இதுகுறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “ஆஞ்ஜியோ” சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “ஆஞ்ஜியோ” சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரத்தக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் ஆஞ்ஜியோ சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சிகிச்சை முடிந்த பிறகு முதல்அமைச்சர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது 24 மணி நேரத்திற்கு பின்னரே, அதன் தாக்கத்தை உணர முடியும்.ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது அப்பல்லோ மருத்துவமனை தகவல் அப்பலோ மருத்துவமனை தனது புதிய அறிக்கையில் கூறபட்டு உள்ளது.

Related Posts