Ad Widget

ஜெனீவா செல்லும் குழுவில் ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் -ஜனாதிபதி

இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள அனைத்து போதைப்பொருட்களும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி அழிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கட்டுநாயக்கவில் வைத்து அவை அழிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர்கள் இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஊடாக அதிக போதைப்பொருள் பாவனைக்கும் வன்முறைகளுக்கும் இட்டுச் செல்லப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஊடகப்பிரதானிகளை இன்று சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக அளவில் பார்க்கப்படுகின்றன.

அந்த நிகழ்சிகள் தணிக்கை செய்யப்படாத நிலையில், அவற்றின் ஊடாக இளைஞர்கள் வன்முறைகள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர்.

இந்தநிலையில் குறித்த விடயத்தில் இளைஞர்களை தெளிவூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் வடமாகாணத்தில் நிலவுகின்ற குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து கால்வாய் ஊடாக நீரைக் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஒன்று தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும், இந்த யோசனையை வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் முன்வைத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் கருத்து கூறும் போது, இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக தமது சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த சமரசிங்க, சரத் அமுனுகம ஆகியோருடன், வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்துள்ளதாக குறிப்பிட்டார்.

விரைவில் ஜெனீவா செல்லும் இந்த குழு, மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து இலங்கையை சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு கோரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கான மரண தண்டனை யார் தடுத்தாலும் அமுலாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் போதைப் பொருள் கடத்தல்கள் குறித்த வழக்குகளுக்காக பிரத்தியேக நீதிமன்றம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக தெரிவித்த அவர், இந்த வழக்குகள் முழுமையாக நிறைவு செய்யப்படுவதற்கு 7 ஆண்டுகள் வரையில் செல்லும் என்றும் கூறினார்.

அதேநேரம் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்த நாட்டை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளும் கட்சி பேதம் இன்றி ஒன்றிணை வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

மேலும் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்தால் தாம் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதாகவும் அவர் ஊடகப்பிரதானிகளிடத்தில் குறிப்பிட்டார்.

Related Posts