Ad Widget

சொந்த மண்ணில் குடியேற ஆசை – அங்கஜன்

angajanஎனது சொந்த இடமான வலி. வடக்கில் மீள்குடியேறி வாழ்வதற்கு ஆசைப்படுகின்றேன்’ என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள இடங்களில் தங்களை மீள்குடியமர்த்தக்கோரி அங்கு வசித்த மக்களால் வசாவிளான் மகா வித்திலயத்தில் நேற்று முன்தினம் பதிவுகளை மேற்கொண்டனர்.

இந்தப் பதிவினை வலி.வடக்கு மீள்குடியேற்றத்திற்கான குழு மேற்கொண்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அங்கஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘வலி வடக்கில் மீள்குடியேறுவது தொடர்பில் நீங்கள் என்னிடம் உதவியை நாடி வந்துள்ளீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் உதவியினை எந்தவித மறுப்புமின்றி நிச்சயமாக செய்வேன்.

என்னுடைய சொந்த இல்லம் கூட வலி.வடக்குப் பிரதேசத்திலேயே தான் உள்ளது என்பதுடன், எனக்கும் அங்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இதனால் வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை மேற்கொள்வது எனது பொறுப்பும் கூட.

நீங்கள் இவ்வளவு காலமும் சொந்த நிலங்களை இழந்து அனுபவித்த இன்னல்கள் ஏராளம். யுத்தத்தின் பின்னர் ஏனைய பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் உங்களுடைய பகுதிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது வேதனையான விடயம்.

உங்களுடைய பிரச்சினை தொடர்பாக அண்மையில் நான் ஜனாதிபதியிடம் உரையாடியுள்ளேன். அது மட்டுமன்றி தற்போது பொறுப்பேற்றிருக்கும் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவுடன் கலந்துரையாடவுள்ளேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts