Ad Widget

சொந்த மண்ணில் குடியமர்த்தாமல் போர் இழப்பை மதிப்பிடுவது எப்படி? – வலி.வடக்கு மக்கள்

Phone Bill Confusion-quctionபெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம்.

வலி.வடக்கு மக்களைச் சொந்த நிலத்தில் குடியமர்த்திய பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

போர்கால இழப்பீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அரசு நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது உயிரிழப்பு, காயம், காணாமற்போனமை, சொத்தழிவு தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் மக்கள் குடியமர்வதற்கு விடுவிக்கப்படாத நிலையில், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளும் படையினரால் இடித்தழிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு நடவடிக்கை வலி. வடக்கின் இந்த 24 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்ததாவது:

முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள் நாங்கள். முழுமையான தொழில் இழப்பையும், சொத்திழப்பையும் இன்னமும் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

எங்கள் வீடு வாசல்கள் உள்ளனவா? இல்லையா? என்பது தெரியவில்லை.

எங்களைச் சொந்த நிலங்களுக்கு விடுங்கள். இதன் பின்னர் கணக்கெடுப்பை நடத்துங்கள். நிவாரணம் தாருங்கள்.

சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகக் கணக்கெடுப்பு நடத்துவதாக நாடகமாட வேண்டாம். உண்மையான கணக்கெடுப்பு நடத்துவதாக இருந்தால் இனியும் தாமதிக்காமல் எங்களைக் குடியமர்த்தி விட்டுக் கணக்கெடுப்பை மேற்கொள்ளுங்கள்” என்றார்.

Related Posts