சுயேச்சையான சர்வதேச விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியும். இலங்கை அரசாங்கமானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மா னத்தைத் தெளிவாக நிராகரித்துள்ள நிலை யில் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது மனித உரிமை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது அமர்வின் பொது விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மினத உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அந்தத் தீர்மானம் குற்றவியல் விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவதற்காக அழைப்பு விடுக்கும் அதேசமயம், மேற்படி தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையின் விபரங்களிலான குறிப்பிடத்தக்க குறைபாடுகளைக் குறிப்பிடுவதில் உரிய கவனம்செலுத்தவில்லை என நாம் அந்த சபையை எச்சரித்திருந்தோம்.
அந்தத் தீர்மானம் உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் சில வெளிநாட்டு ஈடுபாட்டை வழங்குவதனூடாக நம்பகத் தோற்றப்பாட்டை வழங்குவதை மட்டுமே நாடுவதாகவுள்ளது என நாம் தெரிவித்தோம். அத்துடன் நாங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பம் கிடையாது என நாம் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டினோம்.
எனினும் பொறுப்புக் கூறுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட30/1 தீர்மானத்தின் இந்தக் குறைந்தபட்ச கடப்பாடுகளையும் தற்போது இலங்கை அரசாங்கம் ஏற்க உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது. அந்தத் தீர்மானத்தை மறுப்பதற்கான முயற்சிகளுக்கு இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமை தாங்கினர்.
அதில் அதி முக்கிய விடயம் என்னவென்றால் அந்தத் தீர்மானம் தொடர்பான வாய்மொழி மூலமான நிராகரிப்புக்கு மேலாக அந்தத் தீர்மானத்திலுள்ள ஒரு கடப்பாடும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை
அரசாங்கம் அந்தத் தீர்மானத்தைத் தெளிவாக நிராகரித்து அதனை பின்பற்றும் நோக்கம் எதனையும் செயற்படுத்தாத இத்தகைய சூழ்சிலையின் கீழ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அத்தகைய அரசாங்கத்துக்கு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் கால அவகாசத்தை வழங்கியிருப்பது பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் அந்த சபை தொடர்பான நம்பகத்தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்துக்கு இலங்கையை பரிந்துரை செய்வது அல்லது சர்வதேச நியாயஸ்தலமொன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சுயேச்சையான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதே இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை நிலை நாட்டுவதற்கு ஒரே வழிமுறையாக அமையும் என நாம் வலியுறுத்துகிறோம்.