Ad Widget

சிவலிங்கம் அமைத்தால் அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்போமென அச்சுறுத்தல்!

திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் சிவலிங்கம் சிலை அமைக்கப்பட்டால், அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்போம் எனக்கூறி சிங்கள மக்கள் முரண்பட்டு வருவதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சிவராத்திரி முடியும் வரையில் குறித்த இடத்தில் சிவலிங்கத்தை வைப்பதற்கு கோயில் நிர்வாகத்தினர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிவராத்திரியை முன்னிட்டு, திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் நிர்வாகத்தினர் சிவலிங்கமொன்றை நிறுவினர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை குறித்த சிலை உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்த கோயில் நிர்வாகத்தினர், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதில், சிவலிங்கத்தை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே உடைத்ததாக குறித்த பகுதியில் உள்ள கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியதென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிவராத்திரி முடியும் வரையில் குறித்த இடத்தில் சிவலிங்கத்தை வைப்பதாகக் கூறி, கோயில் நிர்வாகத்தினர் சிலையை வைக்க முற்பட்டனர். எனினும், அவ்வாறு சிவலிங்கத்தை வைத்தால் புத்தரின் சிலையை வைப்பதாக கூறி அங்குள்ள சிங்களவர்கள் முரண்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts