Ad Widget

சிங்கள மக்களை அச்சத்தில் உறைய வைத்துவிட்டு தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது!

சிறீலங்காவில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ இழைத்த தவறுகளை தாம் உணர்ந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், தவறுகளைத் திருத்திக்கொண்டு தாம் மீண்டும் ஆட்சிபீடம் ஏற மக்கள் தமக்கு வாக்களிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆட்சேர்க்கும் வகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் சிறீலங்கா பொதுஜன முன்னணி என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன முன்னணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றய தினம் கொழும்பு இராஜகிரியவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கடசி உருவாக்கப்பட்டதன் நோக்கம், எதிர்கால நடவடிக்கை தொடர்பாக கட்சியின் தவிசாளரான ஜிஎல் பீரிஸ் விளக்கமளித்தார்.

இதனைடுத்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

இதன்போது, “இன்று பாதுகாப்பு தொடர்பாக அனைவரிடையேயும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அந்த அச்சநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அன்று முஸ்லிம் மக்கள் வடக்கிற்குச் செல்லமுடியாத நிலையே ஏற்பட்டது. 48 மணித்தியாலங்களிற்குள் வெறும் இரண்டு பொலித்தீன் பைகளில் தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அன்று வடக்கிலிருந்து வெளியேறினர். அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மஹிந்த ராஜபக்சவே முதற்கட்ட நடவடிக்கைளை மேற்கொண்டார். எனினும் மீண்டும் அந்த அபாயநிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அறிவிப்புகளினால் இன்று சிங்கள மக்கள் வடக்கில் வாழமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ் முஸ்லிம் மக்களிடையேயும் அச்சநிலை உருவாகியுள்ளது. எனவே இந்த அச்சநிலையை நீக்குவதே எமது கட்சியின் பிரதான இலக்காகும். பெரும்பான்மையினரான சிங்கள மக்களிடையே அச்சநிலையை ஏற்படுத்திவிட்டு தமிழ் மக்களின் அச்சநிலையை நீக்கிவிடமுடியாது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த நிலையே காணப்படுகிறது. எனவே முதலில் சிங்கள மக்களின் அச்சநிலையை நீக்கிவிட்டு தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை நடத்த தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக எதையேனும் அர்ப்பணிப்பதற்கு எமது கட்சி தயாராக உள்ளது” -என்றார்.

“எமது ஆட்சியில் இழைக்கப்பட்ட தவறுகளினால்தான் எம்மை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள். மக்களின் ஆணைக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம். எனவே தவறுகளை சரிப்படுத்தி பயணத்தை ஆரம்பிக்கின்றோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் எமது தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடர்வதற்கு தயார் என்பதை மஹிந்த ராஜபக்சவும் கூறியிருந்தார். நாங்களும் அதனையே கூறுகின்றோம். எனவே எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்” எனத் தெரிவித்தார்.

Related Posts