சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் சாவு!

சாவகச்சேரியில் தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டநிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தொடருந்துடன் மோதி படுகாயமடைந்தார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிள் மோதுண்ட இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

இதில் நுணாவிலைச் சேர்ந்த விக்னா என்றழைக்கப்படும் பாலமனோகரன் விக்னசூலன் (வயது-28) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் திருத்தத்திற்காக கொடுத்த தனது மோட்டார் சைக்கிளைப் பார்வையிடுவதற்காக அந்த இளைஞன் தனது நண்பணின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வந்துள்ளார்.

இதன் போது ஏ-9வீதியில் இருந்து கந்தையா வீதிக்கு செல்லும் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்து மோட்டார் சைக்கிள் ரயில் கடவையை கடக்க முற்பட்ட இளைஞனை தூக்கி எறிந்ததுடன், மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் இழுத்துச் சென்றுள்ளது.

தூக்கி வீசப்பட்ட இளைஞன் தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கிருந்து மேலதிக சிகிட்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் இடம்பெற்ற ரயில் கடவையில் தடுப்பு துலா இல்லாத போதிலும் சமிக்ஞை விளக்கு மற்றும் அபாய ஒலி காணப்படுகின்றன.

இருப்பினும் ஒரு பக்க சமிக்கை விளக்கு சரியாக இயங்குவதில்லை எனவும், அபாய ஒலியின் சத்தம் போதாது எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts