Ad Widget

சர்வதேச கூட்டுச்சதிக்கு வித்தியா பலிக்கடா! : சட்டமா அதிபர் சாட்சியம்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகின்றது. இதில் சாட்சியமளித்த போதே பதில் சட்டமா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் நேரடி கண்காணிப்பில் கடந்த ஒரு வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட புலன் விசாரணைகளின் மூலம் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை என்பவற்றிற்கு அப்பால், நன்கு திட்டமிடப்பட்ட சம்பவமே இதுவென குறிப்பிட்ட சட்டமா அதிபர், நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கென, வழக்கின் 9ஆவது சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு கோடிக்கணக்கான பணம் சர்வதேச நாடுகளிலிருந்து கைமாற்றப்பட்டுள்ளதாகவும், கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்தை நேரடி காணொளியாக விற்பதற்கே குறித்த பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் 4ஆம், 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆவது சந்தேகநபர்கள் இதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆவது சந்தேகநபர்கள் மாணவியை கடத்தியதாகவும், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் ஆறாவது சந்தேகநபர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், 5ஆம் மற்றும் ஆறாவது சந்தேகநபர்கள் அதனை காணொளியாக பதிவுசெய்துள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் தமது சாட்சியத்தில குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் குறித்த காணொளியை விற்பனை செய்துள்ளமை நிரூபணமாகியுள்ளதென குறிப்பிட்ட பதில் சட்டமா அதிபர், அதற்கான ஆதாரங்களை திரட்டும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், சந்தேகநபர்களின் கையடக்க தொலைபேசி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன்னை விடுவிக்குமாறு கோரி விசாரணை அதிகாரியிடம் சுவிஸ் குமார் இரண்டு மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசியுள்ளார் எனவும் பிரதி சட்டமா அதிபர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவத்திற்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதென குறிப்பிட்டுள்ள பிரதி சட்டமா அதிபர், இச் சம்பவத்திற்கு வழங்கப்படும் தீர்ப்பானது ஒரு பாடமாகவும் மக்களுக்கு ஒரு செய்தியை கூறுவதாகவும் அமைய வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts