Ad Widget

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது : எம்.ஏ.சுமந்திரன்

“சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்புநாடுகளுக்கான கூட்டத்தில் 26 நாடுகள் பங்கு பற்றியுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை கேட்டு அறிந்துள்ளார்கள். எத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும் என நாங்கள் உத்தியோகபூர்வமாகக் கூறியுள்ளோம்.

தற்போது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் பக்கக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இம்முறை இலங்கை தொடர்பாக 32 நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இவற்றை யார் நடத்துகிறார்கள் ஏன் நடத்துகிறார்கள் என்ற தெளிவில்லை உறுப்பு நாடுகளும் தமிழ் மக்கள் தொடர் சார்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதைத்தான் கேட்கின்றார்கள்.

சிலர் ஜெனிவா சென்று தீர்மானங்களை எரிக்கிறார்கள். நாங்கள் தீர்மானம் வேண்டும் என்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையில் எவற்றைச் செய்யமுடியும் எமது மக்களுக்கு சரியாக போய் சென்றடையவில்லை. அங்கு சென்றால் எல்லாம் கிடைத்து விடும் என்று எமது மக்களுக்கு ஊக்குவித்துள்ளார்கள். ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 36 விடயங்கள் இருக்கின்றன. இதில் மூன்று விடயங்கள் பொறுப்புக்கூறல் சம்பந்தமானது இறுதியாக போர்க்குற்றம் சம்பந்தப்பட்டது. ஏனைய 33 விடயங்களும் மிக முக்கியமானவை.

இவ்வாறான பலவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பிரசாரம் என்னவெனில், இந்தத் தீர்மானத்தினால் பயனில்லை இதைக் கைவிட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும். இதனைத்தான் தற்போது கூறிவருகிறார்கள். இது மக்களுக்குத் தேவையானதா யாராவது பகிரங்க வெளியில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியும் என கூறமுடியுமா இது எவராலும் முடியாது.

இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் பாதுகாப்பு சபை இந்த விடயத்தை குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்தாது. இந்த விடயத்தை முன்னின்று நடத்துகின்ற அமெரிக்காவே இதனைச் செய்யாது.

அமெரிக்காவே இந்த நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தகைய தீர்மானத்தை கொண்டு நடத்துக்கின்ற அமெரிக்காவே இதனை செய்யாத போது இதனைத் தெரிந்து கொண்டு மக்களுக்கு பெய்யான பரப்புரைகளைச் செய்து இதைச் செய்வோம் என்று பரப்புரை நடத்துகின்றது. இதற்கு மாற்றுப்பிரச்சாரம் கிடையாது. இதை நான் சொன்னால் ஊடகங்கள் சுமந்திரன் சொல்கின்றார் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லமுடியாது இலங்கையை அவ்வாறு அனுப்பமுடியாது இலங்கையை பாதுகாக்கிறார் என ஊடகங்கள் கூறும் அவ்வாறு ஊடகங்கள்கூறும்போது எங்களுடைய உத்தியோகபூர்வமான காரணம் என்ன என்பதை எங்களுடைய பத்திரிகைகளில் வெளியிடுவதற்காகத்தான் புதிய சுதந்திரன் வெளியீடு செய்கின்றோம்.

Related Posts