Ad Widget

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரேவழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்

13-03-2019
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை
நாற்பதாவது கூட்டத்தொடர்
விடயம் 4 : பொதுவிவாதம்
உரையாற்றியவர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து வெளியிடப்பட்டது.
மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பாரியளவில் மீறப்பட்டமைக்கான, குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவையே, இந்தப் பேரவையில் நாடுகளை மையப்படுத்திய 2012ல் ஆரம்பித்து 30ஃ1 மற்றும் 34ஃ1 வரையிலான, சிறீலங்கா மீதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான மிகப் பிரதானமான நியாயப்படுத்தலாக விளங்கியது.

ஆயினும், 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, அதற்கு இணை அனுசரணை வழங்கிய சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிராகரித்து வருகிறார்கள். இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்களோ குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோரி நிற்க, இந்தக் கூட்டத் தொடர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மத்தியில் வடக்கில் உரையாற்றிய பிரதமரோ மன்னிப்போம் மறப்போம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

நாடுகளை மையப்படுத்திய சிறீலங்கா மீதான இந்த தீர்மானங்களை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசு நிராகரித்து வருகின்ற நிலையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பாதிப்படைந்த மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு, குற்றவியல் நீதியை வழங்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தீர்மானத்தில் கூறப்பட்ட ஏனைய விடயங்களில் பெயரளவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னேற்றங்களாக காண்பிப்பதும், தாம் வழங்கிய உறுதிப்பாட்டை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் சிறீலங்கா அரசின் நேர்மையற்ற பண்பையும் கபடத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

அதனடிப்படையில், சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

Related Posts