சரியான அரசியல் பலத்தின் ஊடாகவே மக்களுக்கான சேவைகளை முழுமைபெறச் செய்ய முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று(12) தெரிவித்தார்.
தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் தொகுதி மாதர் அமைப்பை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்மக்கள் மத்தியில் இன்று இருவேறு அரசியல் போக்குகள் காணப்படுகின்றன. ஒன்று பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக வைத்துக் கொண்டு அதனூடாக தமது சுயலாப அரசியலை முன்னெடுக்கின்றமை மற்றையது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அணுகுவது.
இவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாது அதனூடாக தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதையே விரும்புகின்றது.
அந்தவகையில் எதிர்காலத்தில் எமது மக்கள் சுடேற்றும் உசுப்பேற்றும் அரசியலுக்கு எடுபடாது உண்மையான நடைமுறைச்சாத்தியமான அரசியல் பயணத்தில் பயணிக்க வேண்டும்.
அதனூடாகவே எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வைக் காண முடியுமென்றும் தெரிவித்தார்.
எனவே, எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் இளைய சமூகம் நல் வழிகாட்டிகளாக இருந்து நல்வழிப்படுத்த முன்வர வேண்மெனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன், ஈ.பி.டி.பியின் தென்மராட்சி இணைப்பாளர் அலெக்ஸ்ஸான்டர் சாள்ஸ், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.