யாழ். மாவட்டத்திலுள்ள 53 ஆயிரத்து 907 சமுர்த்தி பயனாளிகளுக்கு செழிப்பான இல்லத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் நல உதவி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் எஸ்.ரகுநாதன் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,
யாழ். மாவட்டத்தில் உள்ள 33 சமுதாய அடிப்படை வங்கிகள் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படுகிறது. அதனைக்கொண்டு, ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளும் தங்கள் வீடுகளிலுள்ள சிறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும்.
கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதியில் இருந்து 28ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்து 989 சமுர்த்தி பயனாளிகளுக்கு முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், மிகுதி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.