Ad Widget

சப்பாத்து அணிந்து வராத மாணவா்களின் காலணிகளை தீ வைத்த ஆசிரியர் கிளிநொச்சி மீண்டுமொரு சம்பவம்!

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் 84 மாணவா்கள் கல்வி கற்று வருகின்றாா்கள், இதில் 24 மாணவா்கள் குறித்த தினத்தன்று பாடசாலைக்கு சப்பாத்து அணியாது செருப்பு, சாண்டில்ஸ், உள்ளிட்ட காலணிகளை அணிந்து சென்றுள்ளனா்.

இதனை அவதானித்த பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் குறிப்பிட்ட 24 மாணவா்களினதும் காலணிகளும் கழற்றப்பட்டு ஒரு பையினுள் இட்டு பாடசாலைக்கு பின்புறமாக தீ வைத்து எரியூட்டியூட்டப்பட்டுள்ளது. இதன் போது சில மாணவா்கள் அழுதபடி தொலைவில் நின்று பாா்த்த போது குறித்த ஆசிரியா் அந்த மாணவா்களை அருகில் வந்து எரிவதனை நன்றாக பாா்க்கும்படியும் கூறியுள்ளாா்.

இந்தச் சம்பவம் வரும்மாதம் க.பொ.த சாதாரணம் தரம் பரீட்சை எழுதவுள்ள மாணவா்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது என பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா்.

குறித்த சம்பவம் தொடா்பில் பாடசாலையின் அதிபரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு வினவிய போது

மாணவா்களிடம் இருந்து அவா்கள் அணிந்து வந்த காலணிகளை குறித்த ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியா் பெற்றுக்கொண்டமை உண்மை எனவும் அவற்றை எரியூட்டப் போவதாக கூறியே அவா் பெற்றுக்கொண்டாா் எனவும் ஆனால் எரியூட்டவில்லை எனவும் அதனை நாம் திருப்பி நாளைய தினமே வழங்கப் போகின்றோம் என கடந்த திங்கள்கிழமை தெரிவித்தாா் . ஆனால் புதன் கிழமை வரை அவ்வாறு எந்த காலணிகளும் மாணவா்களிடம் திருப்பி வழங்க்கப்படவில்லை.

இது தொடா்பில் பெற்றோா்கள் கருத்து தெரிவிக்கும் போது

தங்களுடைய கிராமம் பின்தங்கிய கிராமம் நாங்கள் கூலித் தொழில் செய்தே எங்கள் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை பூா்த்தி செய்து வருகின்றோம். இந்த நிலையில் குறித்த ஆசிரியரின் இந்தச் செயற்பாடு மிகுந்த கவலையை அளிக்கிறது. அத்தோடு எங்கள் கிராமத்தில் வீதிகள் மிக மோசமாக காணப்படுகிறது பல வாய்க்கால்களை கடந்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லவேண்டும்.

எனவே குறிக்கப்பட்ட காலத்தில் மழையும் பெய்திருந்தது எனத் தெரிவித்த அவா்கள் பிள்ளைகள் செருப்புகளுடன் பாடசாலைக்கு சென்றமையினை நாம் நியாயப்படுத்தவில்லை ஆனால் எமது நிலைமைகளை கவனத்தில் எடுக்காது ஆசிரியா் இவ்வாறு நடந்துகொண்டது வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்தனா்.

கடந்த மாதம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சப்பாத்து அணிந்து பாடசாலைக்கு சமூகம் அளிக்காத மாணவா்களின் காலணிகள் கழறப்பட்டு பிரதான வீதியில் குவிக்கப்பட்ட சம்பவம் பல தரப்புக்கள் மத்தியில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவமும் பலரிடமும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts