Ad Widget

சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை நினைவேந்துவோம் – பல்கலை.ஆசிரியர் சங்கம்

jaffna-universityவன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி அனைவரும் தத்தமது இடங்களிலும், பொது இடங்களிலும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.

சட்டத்தை மீறாத வகையில் அனைவரும் எமது உறவுகளுக்காகப் பிரார்த்திப்போம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

நினைவேந்தல் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது அந்தச் சங்கம். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“மே மாதம் என்றவுடன் எமது உறவுகளைக் கொத்துக் கொத்தாகக் காவு கொடுத்த காட்சிகளே எமது மனதின் முன்தோன்றும்.

பலர் எமது கண்களின் முன்னாலும், பலர் எவ்வாறு என்று தெரியாமலும் உயிர்களைக் காவு கொடுத்தனர்.

இந்தக் கொடூரங்களை இதயமுள்ள எவரும் மறக்கவே மாட்டார்கள்.

இலங்கையில் இவ்வாறு பல தடவைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதற்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் நடந்ததைப் போன்று எந்தக் காலகட்டத்திலும் நடைபெறவில்லை.

குழந்தைகள், சிறுமிகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என்று வகைதொகையின்றி ஆயிரக்கணக்காணவர்கள் துடிதுடித்து மாண்டனர்.

மே மாதம் நாம் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த மாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது. எம்மவர்கள் மறைந்ததையிட்டு, அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைக் கூட எம்மால் செய்யமுடியாது போனது. எம்மவர் ஒருவர் இறந்துவிட்டால் வருடா வருடம் திவசம் செய்வோம் அதனை அவர்கள் இறந்த திதியில் செய்வோம்.

ஒருவர் இறந்த திகதி தெரியாவிட்டால் நாம் மாயம் ஒன்றைப் பயன்படுத்தி ஒருநாளில் செய்வோம். வன்னியில் காவு கொள்ளப்பட்ட எமது உறவுகளுக்காக ஒருநாள் பிரார்த்திப்போம். அது இலங்கைச் சட்டத்துக்கு முரணானதொன்றல்ல. நாம் இலங்கையின் சட்டங்களை மதிப்போம்.

இலங்கையின் சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை எங்கும் நினைவேந்துவோம். வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் என்பவற்றில் அமைதியான முறையில் உறவுகள் அனைவரும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடாது பிரார்த்திப்போம். எம்மவர்களுக்காக நாம் பிரார்த்திக்காவிட்டால் வேறு யார் பிரார்த்திப்பார்கள். அனைவரும் அவர்களை நினைவேந்துவோம்’ என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts