Ad Widget

சங்கானை வைத்தியர் தொடர்பில் மக்கள் விசனம்

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் தனியாக கிளினிக் நடத்துவதால் பெரும்பாலான நேரங்களில் வைத்தியர் வைத்தியசாலையில் இருப்பதில்லையென பொதுமக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

‘போதிய வைத்தியர்கள் மற்றும் வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் சங்கானை வைத்தியசாலைக்கு அதனைச் சூழவுள்ள பெருமளவான மக்கள் சிகிச்சைக்காக நாளாந்தம் செல்கின்றனர். அங்கு சிகிச்சைக்கு செல்பவர்களில் சிறிதளவு தொகையினரையே அங்கு கடமையாற்றும் பொறுப்பு வைத்தியதிகாரி பார்வையிடுகின்றார். அதன் பின்னர், தான் நடத்தும் தனியார் கிளினிக் நிலையத்துக்கு வைத்தியர் சென்றுவிடுவார்.

வைத்தியசாலையில் வைத்தியர் இல்லையென யாராவது இறுக்கமாக கேட்டால், அங்குள்ள தாதியர்கள் வைத்தியருக்கு அலைபேசி அழைப்பை மேற்கொண்டு, வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பார்கள்.

வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமாகவிருந்தால், தனது கிளினிக்கிலேயே செய்ய வேண்டும் என வைத்தியர் பணிக்கின்றார். வைத்தியசாலைக்கு முன்பாகக்கூட ஒரு தனியார் இரத்த பரிசோதனைக்கூடம் இருக்கின்றது. வைத்தியரின் தனியார் கிளினிக் செல்வதற்கு பஸ் வசதிகள் இல்லை. முச்சக்கரவண்டியில் சென்று வர 300 ரூபாய் செலவாகின்றது.

நோய்க்கு மருந்துக்குச் செல்லும் மக்கள் இவ்வாறு பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர், தான் கடமையாற்றும் வைத்தியசாலைக்கு அருகில் தனியார் கிளினிக் நடத்த முடியாது என்ற நிபந்தனையிருந்தும் அதனையும் மீறி இந்த வைத்தியர் செயற்படுகின்றார்’ என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related Posts