கொழும்பு துறைமுகத்தில் இன்றைய தினம் அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகத்தின் ஊழியர் ஓய்வறைப் பகுதியிலேயே இன்று அதிகாலை தீ பரவியிருப்பதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 38 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தீயணைப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.