Ad Widget

கொள்ளைச் சம்பவங்களில் இலங்கை அகதிகளுக்கு தொடர்பா? பொலிஸார் விசாரணை

தமிழகத்தின் – தாரமங்கலத்தில் நடக்கும் தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவங்களில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகத்தில், அவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை, தாரமங்கலம் பொலிசார் நேற்று ஆய்வு செய்தனர்.

தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களில், பத்துக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

எனினும் இது தொடர்பில், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அதில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம், பொலிசாருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திக்காட்டானூர் ஆகிய முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களில், இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்களை, வாகனங்களுடன் பவளத்தானூர் முகாமிற்கு வரவழைத்து, நேற்று ஆய்வு செய்தனர் என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் வாகனங்களை ஆய்வு செய்ததில், சிலர் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளதும், ஒரு வாகனம் கூட, இலங்கை தமிழர் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இது குறித்து இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த தனபால் கூறியதாவது,

இலங்கையை விட்டு தமிழகத்திற்கு வந்து, 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு சார்பில், பல்வேறு உதவிகள் செய்தாலும், புதிய வாகனம் வாங்கும்போது, அதை எங்கள் பெயரில் பதிவு செய்ய, அரசு தடை விதித்துள்ளது. அதனால், நாங்கள் இலங்கை தமிழர் அல்லாத வேறொருவர் பெயரில், பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

வாகனங்களில் வெளியூர் செல்லும்போது, சோதனையில் சிக்கி, அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள், நாங்கள் வாங்கும் வாகனங்களை, எங்கள் பெயரிலேயே பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts