Ad Widget

கொடிய வறுமையில் முதலிடத்தில் கிளிநொச்சி மாவட்டம்!

வறுமையான மாவட்டங்களில் வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களே முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளதோடு கொடிய வறுமையான மாவட்டங்களாக இனங்கானப்பட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் இடம்பெறும் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரையிலும் வறுமைக்கோட்டுக்குள் இருந்த மொனறாகலை மற்றும் மன்னார் மாவட்டங்கள் முன்னிலை இடங்களில் இருந்து விடுபட்டுள்ளதோடு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் முதன்மை வறுமைப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டமும் கடந்த 7 வருடங்களாக வறுமை நிலையில் முன்னிலையில் இருப்பதாகவும் ஸ்ரீபத்மநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தமாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் படி, கிளிநொச்சி 18.2 வீதம் வறுமை நிலையுடன் இலங்கையில் வறுமையான மாவட்டங்களில் முதலாம் இடத்தில் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், 12.7 சதவீதத்தில் முல்லைத்தீவு இரண்டாவது வறுமை மாவட்டமாகவும் உள்ளது எனக் கூறியுள்ளார்.

வறுமை நிலையில், 11.5 சத வீதத்தில் உள்ள மட்டக்களப்பு, 10.0 சதவீதத்தில் உள்ள திருகோணமலை, 07.7 வீதத்தில் யாழ்ப்பாணமும் முறையே 3,4,5 ஆகிய இடங்களில் உள்ள வறுமை மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அபோன்று, சனத்தொகையின் அடிப்படையில் கிளிநொச்சியில் 21249 பேரும், முல்லைத்தீவில் 12003 பேரும், மட்டக்களப்பில் 60912 பேரும், திருகோணமலையில் 39718 பேரும், யாழில் 46052 பேரும் வறுமைக்குட்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே வறுமை, நுண்கடன், பாலியல் துஷ்பிரயோகம், போலி நாணயத் தாள்களின் பாவனை போன்றன அதிகளவில் இடம் பெற்றுள்ளன எனவும் ஸ்ரீபத்மநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts