Ad Widget

கைவிடப்பட்டது யாழ்.பல்கலை. கல்விசாரா ஊழியர்களின் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுத்து வந்த சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தததும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி வழங்கிய உறுதிமொழியை அடுத்தே அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது.

சுழற்சிமுறை உணவுதவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை தகுதி வாய்ந்த அதிகாரி இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத் தலைவர் தங்கவேல் சிவரூபன், முன்னாள் தலைவர்கள் சி.கலாராஜ், சி.தங்கராசா, இணைச் செயலாளர்கள் நவராஜா, நிசாந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன்போது, ஜனாதிபதித் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் நியமனங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கே.கந்தசுவாமி, தேர்தல் நிறைவடைந்ததும் பல்கலைக்கழகத்துக்குள் உள்ளீர்ப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று உறுதிமொழி வழங்கினார்.

அதனையடுத்து கடந்த 2 வாரங்களாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனப் பணிகளை இடைநிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் இணைத்து நியமனத்தை வழங்குமாறு உயர் கல்வி அமைச்சர் ரவூக் ஹக்கீமிடம் வலியுறுத்துவேன் என்று உறுதிமொழி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts