Ad Widget

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் விடயம் தொடர்பில் தங்களுக்கு ஜூலை 20ஆம் திகதி நான் கடிதம் எழுதியுள்ளேன்.

அதன் பிரதி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்களது செயலாளர் ஜூலை 28ஆம் திகதி அக்கடிதத்திற்குப் பதிலளித்துள்ளார். அதன் பிரதியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 09.08.2017 அன்று எனக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் பிரதியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவரது கடிதத்திற்கு 2017.08.11 ஆம் திகதியே கடிதம் மூலம் நான் பதிலளித்திருந்தேன். அதன் பிரதியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தங்களது எண்ணப்பாட்டினை நான் நன்கறிவேன். மக்களுக்குக் காணிகளை வழங்குவது தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.

இவர்கள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்த மக்கள் தங்களது காணிகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். இவர்களது பிறப்புரிமை மறுக்கப்படலாகாது.

ஒருதசாப்த காலத்திற்கு மேலாக தங்களது காணிகளிலிருந்து இவர்கள் வெளியேறியுள்ளார்கள். ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ளன.

இந்தக் காணிகளை மீளத்தருமாறு வேண்டி, இந்த மக்கள் கடந்த 165 நாட்களாக மழையிலும் வெயிலிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

மிகுந்த மரியாதையுடன் நான் வேண்டிக்கொள்வதென்னவென்றால், கூடிய விரைவில் இந்தக் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தாங்கள் இது தொடர்பில் ஒருவழிகாட்டலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேவையேற்படின், தாங்கள் இது தொடர்பில் முடிவெடுக்கும் படியான ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறும் தயவாக வேண்டுகிறேன். இது தொடர்பில் விரைவான தீர்வொன்றினை நான் எதிர்பார்க்கிறேன்” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts