கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான அமரர் வி.வீரசிங்கம் அவர்களின் நினைவாக மே மாதத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட இருப்பதாகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அந்த கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.
கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டில் 100 நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கூட்டுறவாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமரர் வீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியிடுதலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இது ஜனாதிபதியினதும் அஞ்சல்துறை அமைச்சரினதும் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, இப்போது அஞ்சல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நினைவு முத்திரையை வெளியிடுவதற்குச் சம்மதம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
மே மாதத்தில் இதனை வெளியிட்டு வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அமரர் வி.வீரசிங்கம் 1940ஆம் ஆண்டில் இருந்து கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய ஒருவர்.
பேராசிரியர் அமரர் கைலாசபதியால் ´நடமாடும் கூட்டுறவுப் பல்கலைக்கழகம்´ என வர்ணிக்கப்பட்ட வீரசிங்கம், மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
அவரது நினைவாகவே யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக வீரசிங்கம் மண்டபம் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.