தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக் காண, எந்தவொரு அரசாங்கமும் தீர்வினை முன்வைக்காத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவினை வழங்குவதில் எந்தவொரு பயனும் இல்லை என்று ஈ.பி.ஆர்.எப். கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், அர்த்தமற்ற ஆதரவினை வழங்கி அரசாங்கத்தை காக்கும் செயற்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பது குறித்து தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிந்தித்திருக்க வேண்டும், எனினும் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றோம் என தெரிந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது.
சர்வதேச ரீதியில் இலங்கையை காப்பாற்றும் முயற்சியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக சுரேஸ் பிரேமசந்திரன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.