Ad Widget

கூட்டமைப்பின் தலைவருடன் வடக்கு ஆளுநரின் முதலாவது சந்திப்பு!

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இதன்போது வடக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் முதற்கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக திங்கட்கிழமை பதவியேற்ற கலாநிதி சுரேன் ராகவன் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

Related Posts