Ad Widget

கீரிமலையில் சடலம் மீட்பு- கழுத்து நெரித்துக் கொலை செய்தமை உறுதி!

கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கியத் தகவலை அடுத்து, இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார். நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர், அவர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிட்டுள்ளனர்.

இந்த மரணத்தில் காங்கேசன்துறைப் பொலிஸார் சந்தேகம் கொண்டதால், உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் இவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts