Ad Widget

கிளிநொச்சியில் போக்குவரத்துகள் சீர்குலைந்துள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, குறித்த மாவட்டத்துக்கான போக்குவரத்துகள் சீர்குலைந்துள்ளன.

கிளிநொச்சி மேற்குக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள், கோணாவிலின் தாமரைக்குளம், அக்கராயன்குளம், அக்கராயன் பாலங்குளம், வன்னேரிக்குளம் ஆகிய குளங்களிலிருந்து பாய்கின்ற வான் வெள்ளங்களைக் கடந்தே முழங்காவில் வரை பயணிக்க வேண்டியுள்ளன.

பல்லவராயன்கட்டுச் சந்தியிலிருந்து வேரவில் செல்லும் பஸ்களும் மழைவெள்ளம் வீதிக்கு குறுக்காக பாய்வதன் காரணமாக, பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளது.

அக்கராயனிலிருந்து முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற இலங்கை போக்குவரத்து சேவை, மழை வெள்ளம் காரணமாக தற்போது நடைபெறுவதில்லை. இதனால் முக்கொம்பனிலுள்ள 600 குடும்பங்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது நீர்ப்பாசனக் குளங்களும் நிரம்பி வழிவதன் காரணமாக, போக்குவரத்து நெருக்கடியை கிளிநொச்சி மாவட்ட மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளனர்.

Related Posts