Ad Widget

கிரிக்கெட் போட்டி– கேப்டன்களாக சூர்யா, விஷால், ஆர்யா,சிவகார்த்திகேயன்….

ஏப்ரல் 17-ந் திகதி சென்னையில் நடைபெறவிருக்கிற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன்களின் விவரம் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 17-ந் திகதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியில் எத்தனை அணிகள் போட்டியிடப் போகின்றன. ஒவ்வொரு அணிக்கும் யார் கேப்டன் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு அணிக்கும் தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். ‘மதுரை காலேஜ், ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘கோவை கிங்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘ராம்நாடு ரைனோஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘சேலம் சீட்டாஸ்’ என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த 8 அணிகளுக்கும் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோரை கேப்டனாக நியமிக்கவிருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யார் எந்த அணிக்கு கேப்டன் என்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு அணியிலும் விளையாடும் வீரர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. ஒரு அணியில் மொத்தம் 6 வீரர்கள் இருப்பார்கள்.

இந்த கிரிக்கெட் போட்டியின் விளம்பர தூதுவர்களாக அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கிரிக்கெட் போட்டியை ரஜினி, கமல், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி ஆகியோர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இந்த நட்சத்திர கிரிக்கெட் மூலம் வரும் வருவாயை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக செலவிடவிருக்கிறார்கள். இந்த போட்டி குறித்த முழு தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts