Ad Widget

கார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மாணவன் கோப்பாய் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவரை விடுவித்தனர்.

இதேவேளை, “மாணவன் கைது விடயம் தொடர்பாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இந்துக்களின் நிகழ்வை நடத்த முடியாது தடுத்ததுடன், மாணவனை கைதுசெய்தமை தவறு எனச் சுட்டிகாட்டினேன்.

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், இன்று இந்துக்களின் கார்த்திகை தீபத்திருநாள் என்று தான் அறிந்திருக்கவில்லை என்றும் மாணவனை உடனடியாக விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்” என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மேலும், மாணவன் கைது பற்றி அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு மாணவனின் விடுதலையை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

Related Posts