ஒரு இடத்தில் காசு கொடுத்து காணி வாங்கி அங்கு வசிப்பது வேறு, அரசாங்கத்தால் முறையற்ற விதத்தில் குடியேற்றம் செய்வது வேறு. இதனை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உணரவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வெள்ளவத்தையில் தமிழர்கள் காணிகள் வாங்கி குட்டித் தமிழகம் போன்று குடியேறி வாழ்வது போன்று, வடக்கிலும் சிங்களவர்கள் காணிகளை வாங்க முடியும் என ஆளுநர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
தந்தை செல்வா – பண்டா ஒப்பந்தத்தின் போது, தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளமாட்டோம் எனக்கூறியபோதும், தொடர்ந்தும் குடியேற்றங்கள் இங்கு இடம்பெறுகின்றன. இந்த சிங்களக் குடியேற்றங்களை தான் நாங்கள் எதிர்க்கின்றோம்.
தமிழர்களின் காணிகளை அடாவடித்தனமாக அபகரித்து, அதில் சிங்களவர்களை குடியேற்றுவதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். எங்கள் தாயகத்தில் எங்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடு தொடர்ந்து நடைபெறுகின்றது.
நயினாதீவில் 75 அடி புத்தர் சிலை நிர்மாணிப்பதில் ஆளுநர் இவ்வளவு அக்கறை காட்டுவதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை?. நயினாதீவு என்ற பெயரை மூன்று மொழிகளிலும் நாகதீப என்று மாற்றினார்கள். இதுவா நல்லிணக்கத்தை கட்டியெழுப்புகின்ற செயற்பாடு? என்றார்.