Ad Widget

காணிக்கொள்ளை தடுத்து நிறுத்தப்படவேண்டும் – கஜதீபன்

p-kajatheepanதமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் காணி கொள்ளையடிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் நேற்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார்.

ஆசைப்பிள்ளையேற்றத்தில் 52 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள, பெண்ணொருவரின் 50 ஏக்கர் காணியை, படை முகாமிற்காக சுவீகரிக்கும் நோக்குடன் நிலஅளவை திணைக்கள அலுவலர்களினால் காணி அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, அளவீடு செய்யும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலே கஜதீபன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினர், தமிழர்களின் பிரதேசங்களை வளைத்து பிடித்து தங்களது இருப்புக்காகவும் தங்களது முகாம்களை அமைப்பதற்காகவும் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வலி.வடக்கு, அச்சுவேலி, கிளிநொச்சி என தமிழர் தாயக பிரதேசம் எங்கும் காணிகளை கொள்ளை அடிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது

இவ்வாறான காணி அபகரிப்புக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக நில அளவையாளர்கள் எங்கே செல்கின்றார்கள் என்று அவர்கள் பின்னால் சென்று தடுக்கும் செயற்பாடுகள் எவ்வளவு நாளுக்கு நாங்கள் தொடர்ச்சியாகச் செய்ய போகின்றோம் எனத் தெரியவில்லை.

அது தொடர்பில் மக்களும் மிகப்பெரிய அளவில் வெறுப்படைந்துள்ளார்கள். எனவே தொடர்ச்சியாக இவ்வாறன நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Related Posts