Ad Widget

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடப்போவதாக அறிவித்துள்ள அச்சங்கத்தினர் அது தொடர்பான கடிதத்தினை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 23ஆம் நாள் வவுனியாவில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு முன்பாக காலை 8.00மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அச்சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்களால் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் தமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.

அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளுர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு, சர்வதேச சமுகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், சாத்வீக ரீதியாக சகல கவனவீர்ப்பு மற்றும் அழுத்த போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை.

ஆகவே எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?

உயிருடன் இருந்தால் அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?

உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின் அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறித்த கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts