காங்கேசன்துறை – வவுனியா இடையே தினம் ஒரு தொடருந்து சேவை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து பயணித்த ஆரம்பித்த தொடருந்து வவுனியாவை காலை 8.07 மணிக்குச் சென்றடையும்.
அத்துடன், இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்று யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதான அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.
சாதாரண வகுப்பு தொடருந்து சேவையாக நடைபெறும் இதன் கட்டணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 60 ரூபாயும் மாங்குளத்துக்கு 120 ரூபாயும் வவுனியாவுக்கு 160 ரூபாயும் அறவிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தினமும் அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்தும் அதிகாலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய ரயில் நிலையத்திலிருந்தும் நாவற்குழி, கொடிகாமம் நிலையங்களில் தரித்து கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
காலை 6.53 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து காலை 7.22 மணிக்கு மாங்குளத்திலிருந்தும் புறப்படும் தொடருந்து காலை 8.07 மணிக்கு வவுனியா ரயில் நிலையத்தைச் சென்றடையும். மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் ரி.பிரதீபன் கூறினார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை உள்ள நிலையில் அரச, தனியார் மற்றும் வங்கி ஊழியர்களின் நலன்கருதி இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.