எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 31 ஆம்திகதி நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களை, குறித்த இளைஞர் தனது சமூக வலைதளக் கணக்கில் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எடிட் செய்து, சுயமாகக் குரல் பதிவு செய்து பதிவேற்றிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய நிலையில், கலைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த கலைஞன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்