Ad Widget

கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களின் பெயர் பட்டியல்

2015 – 2016 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் :

வைத்திய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியல்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழகங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களை பதிவு செய்யும் பணிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உட்பட்டதாக இடம்பெறுகிறது. முதலாவது சுற்று வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் வெற்றிடங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டால் மாத்திரமே இரண்டாவது சுற்றுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் இடம்பெறும்.

பொதுவான மாணவர் அனுமதியின் அடிப்படையிலேயே மஹாபொல புலமைப்பரசில்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஏனைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களின் ஆலோசனைகளுக்கு அமைய புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ள முடியும். இம்முறை கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு 26 ஆயிரத்து 541 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். கலை, வர்த்தகம், பௌதீகம் உள்ளிட்ட கற்கைநெறிகளுக்கு மேலதிகமாக இம்முறை கல்வி ஆண்டுக்காக புதிதாக இரண்டு கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் பௌதீக கட்டமைப்பு தொழில்நுட்பம் என்ற கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடத்திலும் பார்க்க இம்முறை 2208 மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Posts