காரைநகர், கசூரினா கடற்கரையில் ஆணொருவரின் சடலம் புதன்கிழமை (30) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
5 அடி 4 அங்குலம் உயரமும், பொதுநிறமும், கறுப்பு நிற தலைமயிரும் பச்சை நிறத்தில் ஸ்ரீலங்கா என எழுத்துப் பொறிக்கப்பட்ட காற்சட்டை அணியப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது.
மேலும், கடற்கரையில் இருந்து மேலதிகமாக வெள்ளைச்சறமும், நீலச்சேட்டும் மீட்கப்பட்டது.
ஆனால், யாருடைய சடலம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எவ்வித சான்றுகளும் சடலத்துடன் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.