Ad Widget

ஏயார் ஏசியா விமானம் கடலில்! இதுவரை 40 சடலங்கள் மீட்பு

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 பேரின் உடல்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று 162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் மாயமானது. மோசமான வானிலை காரணமாக பாதை மாறிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என இந்தோனேசியா தெரிவித்தது.
இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே இந்தாண்டு துவக்கத்தில் மாயமான மலேசியா விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அதே கதி ஏர் ஏசியா விமானத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ என உறவினர்கள் அஞ்சினர்.
இதற்கிடையே மாயமான விமானத்தைத் தேடும் பணியில் 30 கப்பல்கள், 15 விமானங்கள் ஈடுபட்டன.  அவுஸ்திரேலியா ,மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்பிடி படகுகள் வாயிலாகவு ஜாவா கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தேடுதலின் பலனாக ஜாவா கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய சில பொருட்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விபத்து நடந்ததாக சந்தேகிக்கப் படும் பகுதி புகை மண்டலம் தெரிவதாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தார்கள்.
இதைடுத்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது இந்தோனேசியாவின் களிமன்தன் தீவுக்கு அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் பயணிகளின் உடல்கள் மற்றும் உடைமைகள் கடலில் மிதப்பதும் தெரிய வந்துள்ளது. இத்தகவலை இந்தோனேசிய விமான போக்குவரத்துத் துறை தலைவர் ஜோக்கோ முர்ஜாமோட்ஜோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கடலில் மிதப்பது ஏர் ஏசியாவின் சிதறல் பாகங்கள் என்று தெரிய வந்துள்ளது. தற்போது இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தத் தீவுக்கு விரைந்துள்ளார்.
பயணிகள் வெளியேறும் கதவு சரக்குப் பகுதியின் கதவு ஆகியவை கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய களிமன்தன் பகுதியின் பாங்காகலன் பன் என்ற இடத்திலிருந்து தென் மேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இவை மிதக்கின்றன என்றார்.
உடல்கள் மீட்பு இந்த இடத்திற்கு தற்போது மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர். மீட்புப் பணிகளும் தொடங்கி விட்டன. விமானத்திலிருந்து மீட்புப் படையினர் கீழே இறங்கி தொங்கியபடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 40 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மீட்கப்பட்ட உடல்களை கடற்படை கப்பலில் ஏற்றி வருகின்றனர். இறந்த உடல்களில் உயிர் காக்கும் ஜாக்கெட் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இத்தகவலைக் கேள்விப்பட்டு விமானம் கிளம்பிய இடமான சுரபயாவில் குழுமியுள்ள பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

Related Posts