Ad Widget

ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் புதிய விசா நடைமுறை

சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

அந்த வகையில், பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் காலப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை பெருமளவில் நாட்டுக்கு அழைக்கும் வகையில் இந்த விசா நடைமுறையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வருடத்தின் ஏனைய நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக ஏப்ரல் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த வீதத்தை கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்த போதிலும் மே மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வெசாக் மற்றும் நோன்மதி விழா மற்றும் எசெல பெரஹர போன்ற பௌத்த மத வைபவங்களும் கலாசார நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெறுகிறன. இதனடிப்படையில் பௌத்த மதம் பிரபலமடைந்துள்ள தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாகவிருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இந்நிலையைக் கவனத்திற்கொண்டு இக்காலப்பகுதியில் தாய்லாந்து உட்பட ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளான பிரித்தானியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கும் இலவச விசா வசதிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Related Posts